"டேய் மொட்டை நீ வந்து வாசி" .
போர்டில் டீச்சர் எழுதி போட்டிருப்பதை வாசிக்க வேண்டும்.தவறாய் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் டீச்சருக்கு வாகாய் இருக்கும் இடத்தில் தலையிலோ, பின்பக்கத்திலோ அடி விழும்.
"ஜ"வுக்கும் " ஐ "க்கும் வித்தியாசம் தெரியாமல் தவறுதலாய் வாசிக்க, டீச்சரிடம் இருந்த பிரம்புதான் அந்த வித்தியாசத்தை உணர்த்தியது.
ஒரு நாள் நீரில் மிதக்கும் பொருள்களை சொல்லுமாறு வகுப்பில் பொதுவாய் கேட்க நான் "கரித்துண்டு" என்று பட் டென்று சொல்லி வாங்கிய "முதல் கைத்தட்டலுடன்" ஆரம்பமானது எனது பள்ளிப்படிப்பு.
சராசரி மாணவனாக இருந்த என்னை நன்கு படிக்கும் மாணவனாக மாற்றியது அந்த மூணாப்பு டீச்சரின் அன்பும் வழிகாட்டுதலும் தான்.
அதன்பின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு விதமான வழிகாட்டுதல்கள். ஐந்தாம் வகுப்பில் நடந்த க்விஸ் ப்ரோகிராமில் ஜெயித்தது.ஆறாம் வகுப்பில் நடந்த க்விஸ் ப்ரோகிராமில் ஜோனல் லெவலில் முதல் பரிசு பெற்றது. இப்படி நிறைய ..
ஏழாம் வகுப்பில் தேசியப்பறவை வரைந்து அதனடியில் ஒரு கவிதை கட்டாயம் எழுதவேண்டும் என டீச்சர் சொல்ல,எனக்குள்ள ஒரு கவிஞன் பார்ம் ஆனது அப்போதுதான்,
பெண் கூந்தல் போன்ற
தோகை உடைய மயிலே
நீ
அடைபட்டது கூண்டிலே அல்ல
எனது மனச் சிறையிலே!!
என்று எழுதி பாராட்டப் பெற்றது, என பள்ளிப்பருவத்தின் ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு எதையோ கற்றுத்தந்து என்னை செம்மைப்படுத்தியவைதான்.
நடை பழகும் குழந்தைக்கு விரல் பிடித்து நடக்க கற்றுத்தரும் ஒரு அன்னை போல் அனைத்தையும் கற்றுத்தந்து, கூடவே
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்பதையும் சொல்லித்தந்து, அனுதினமும் கற்றல் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர வைத்த எனது ஆசிரியப் பெருமக்களுக்கு "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் "
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!
டிஸ்கி : இது கவிதையா என்று யாரும் கல்லெடுக்க வேண்டாம் ... அவ்வப்போது எனக்குள் வீறு கொண்டு எழும் கவிஞனை, பதிவுலகத்தின் நன்மை கருதி அண்ணன் "வெளங்காதவன்" கமெண்டை காட்டி கட்டிப் போட்டுள்ளேன் .ஹிஹிஹி....